கட்ஆப் எதிர்பார்த்த மாணவர்கள் அப்செட்! பிளஸ் 2 இயற்பியல் தேர்வு ரொம்ப கஷ்டம்
திருப்பூர்: பொறியியல், மருத்துவ துறையில் இணைய விரும்பி, கட் ஆப் மதிப்பெண் எதிர்பார்த்து இயற்பியல் தேர்வெழுதிய மாணவர்கள், வினாத்தாள் வடிவமைப்பில் திணறினர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று இயற்பியல் தேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 12 ஆயிரத்து 541 மாணவ, மாணவியர் தேர்வெழுத இருந்த நிலையில், 62 பேர் ஆப்சென்ட் ஆகினர். 12 ஆயிரத்து 479 பேர் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக, விண்ணப்பித்த, 42 பேரில், 31 பேர் தேர்வெழுதினர். 11 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:கவுசல்யா: இயற்பியல் பாடத்தில், 2, 3 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், எதிர்பாராத கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு எளிது என்று சொல்வதற்கில்லை. சற்று கடினமாகத்தான் இருந்தது.ஷோபிகா: இயற்பியல் தேர்வு கடினம் தான்; மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வியில், கட் ஆப் மதிப்பெண் முக்கியமானதாக உள்ள நிலையில், கட் ஆப் மதிப்பெண் எதிர்பார்த்து தேர்வெழுதியவர்கள், மனச்சோர்வு அடைந்தனர்; சென்டம் பெறுவது கடினம்.நாகசெல்வம்: இயற்பியல் பாடத்தில், 2,3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் கடினமானதாக இருந்தது. புத்தகத்தின் உட்புறம் இருந்து கேள்விக் கேட்கப்பட்டிருந்தாலும், எதிர்பாராத கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. வெற்றி பெறுவது எளிது; எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்குமா என தெரியவில்லை.அட்டை டூ அட்டை படிக்கணும்!திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியை பிரியாகூறியதாவது:இயற்பியல் கேள்வித்தாள் சற்று கடினமாக தான் இருந்தது. கடந்தாண்டுகளில், புளு பிரின்ட் முறை இருந்த போது, எந்தெந்த பாடங்களில் இருந்து கேள்வி வரும் என்பதை மாணவர்களுக்கு கற்பித்து, அந்த பாடங்களை முக்கியத்துவம் கொடுத்து படிக்க ஆலோசனை வழங்கினோம்.தற்போது, புளு பிரின்ட் முறை இல்லாததால், புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படித்தாக வேண்டும்; அதுவும், கல்லுாரி சேர்க்கையில் கட் ஆப் எதிர்பார்த்து தேர்வெழுதும் மாணவர்கள் புத்தகத்தின் அட்டை டூ அட்டை படிக்க வேண்டும். இந்தாண்டு இயற்பியல் வினாத்தாள் சற்று கடினம் தான்.