பி.இ. பாடப்பிரிவை மிஞ்சியது பி.ஏ. ஆங்கிலம்
பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகளில் கூட பி.ஏ., ஆங்கில பிரிவுகளில் 50 மாணவர்கள் சேர்க்க இடம் இருப்பின் 500 விண்ணப்பங்கள் வரை வந்துள்ளன. மதுரை போன்ற ஊர்களில் இடம் கிடைக்காதவர்கள் பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் பகுதியில் பி.ஏ., ஆங்கிலத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர். பி.இ., கல்லூரிகள் ஏராளமாக உள்ள நிலையில், "அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே" என விளம்பரம் செய்தும், மாணவர்கள் பலர் பி.இ., சேர்வதை காட்டிலும் கலை கல்லூரிகளில் வேலை சார்ந்த படிப்புகளில் சேர்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதிலும் ஆங்கில மோகம் தற்போது அதிகரித்து, பிளஸ் 2வில் ஆங்கிலத்தில் தட்டுதடுமாறி தேறியவர்கள் கூட பி.ஏ., ஆங்கிலம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., ஆங்கில பிரிவில் 60 இடங்களுக்கு, முன்பு 30 இடங்கள் கூட சேர்க்கை நடைபெறாது. ஆனால் தற்போது இதே பிரிவில் 60 இடங்களுக்கு 500 விண்ணப்பங்கள் வந்துள்ளதால் இரண்டாவது ஷிப்டு நடத்த திட்டமிட்டு கவுன்சிலிங் நடத்த உள்ளனர்.