உள்ளூர் செய்திகள்

வழக்கறிஞர் எழுத்துத் தேர்வுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான், பயிற்சி செய்ய முடியும் என்ற நிலையில், சிலர், அண்டை மாநிலத்தில் தேர்வு எழுதி, சான்றிதழ் பெறும் நிலை உருவாகியுள்ளது. கோர்ட்டில் வழக்கறிஞராக, பயிற்சி செய்ய வேண்டும் என்றால், சட்டப் படிப்பு முடித்தவர்கள், சட்டப்பூர்வ அமைப்பான, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்தவர் மட்டுமே, வழக்கறிஞராக தொழில் செய்ய முடியும். தற்போது, பார் கவுன்சில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தாலும், இந்திய பார் கவுன்சில் நடத்தும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன்பின், சர்டிபிகேட் ஆப் பிராக்டிஸ் எனும் சான்றிதழை, பார் கவுன்சில் வழங்கும். இச்சான்றிதழ் பெற்ற பின் தான், வழக்கறிஞராக, பயிற்சி செய்ய முடியும். பார் கவுன்சில் நடத்தும் இத்தேர்வுக்கு, சட்டப் படிப்பு படிப்பவர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த டிசம்பர், மார்ச் மாதங்களில், எழுத்துத் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் தேர்வை எழுத மாட்டோம் என புறக்கணித்ததால், மார்ச் மாதத்துக்கு தேர்வு, ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு, அதுவும் தள்ளிவைக்கப்பட்டது. எழுத்துத் தேர்வை, வரும் 24ம் தேதி நடத்தப் போவதாக, இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பார் கவுன்சிலில், 3,000 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள், வழக்கறிஞர் தொழிலை துவங்க, தேர்வு எழுதினால் தான் முடியும். கடந்த ஆண்டு ஏப்ரலில், சட்டப் படிப்பு முடித்தவர்கள், கண்டிப்பாக இந்த எழுத்துத் தேர்வை எழுதியாக வேண்டும். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர, பெரும்பான்மை மாநிலங்களில் சட்டப் படிப்பு முடித்தவர்கள் அனைவரும், எழுத்துத் தேர்வில் எவ்வித தயக்கமும் காட்டாமல் கலந்து கொள்கின்றனர் என, பார் கவுன்சில் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த, மாநில பார் கவுன்சில் தலைவர்கள் கூட்டத்தில், அகில இந்திய பார் கவுன்சிலின் எழுத்துத் தேர்வு முடிவுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழகம் - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான வழக்கறிஞர் செல்வம் கூறும்போது, "இந்திய பார் கவுன்சிலின் முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துவோம்" என்றார். தமிழகத்தில் இருந்து இந்திய பார் கவுன்சில் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் கூறும்போது, "சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்து தீர்வு காண வேண்டும். டில்லியில், இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டத்தின் போது, இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முயற்சிகள் எடுப்பேன்" என்றார். தமிழகத்தில், எழுத்துத் தேர்வுக்கு தயக்கம் காட்டும் நிலை, ஒருபுறம் இருந்தாலும், அண்டை மாநிலமான பெங்களூருக்கு சென்று, தேர்வு எழுதியவர்களும் உண்டு. தமிழகத்தில் சட்டப் படிப்பு முடித்த, 10க்கும் மேற்பட்டவர்கள், பெங்களூரு சென்று, வெற்றிகரமாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். "தமிழகத்தில் தேர்வு எழுத எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கஷ்டப்பட்டு படிப்பை முடித்து விட்டு, எவ்வளவு நாட்கள் தான் பிராக்டிஸ் செய்யாமல் இருப்பது" என, தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். குடும்பச் சூழ்நிலை, தொழில் ஆர்வம் போன்ற பல காரணங்களால், எழுத்துத் தேர்வை இவர்கள் கடினமாக எடுத்துக் கொள்ளவில்லை. எழுத்துத் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற நிலையில், ஆர்வம் மிக்கவர்கள், அருகில் உள்ள மாநிலங்களுக்கு படையெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்