உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு வினாத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பு

விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில் 52க்கு பதில் 44; கம்ப்யூட்டர் சயின்ஸ் 40க்கு 32; அக்கவுன்டன்சி 54க்கு, 46; இதர பாடங்களுக்கு 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு 32க்கு 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்