மாணவர்கள் திறனுக்கு ஏற்ப கற்பித்தல் திட்டம்
மதுரை: மாணவர்களின் திறன் அறிந்து அதற்கேற்ற கற்பித்தல் திட்டங்களை ஆசிரியர்கள் செயல் படுத்த வேண்டும், என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.மாவட்டத்தில், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்து அவர் பேசுகையில், மாணவர்கள் திறன் அறிந்து அதற்கு ஏற்ற கற்பித்தல் முறையை ஆசிரியர்கள் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கு பின் தேர்ச்சி குறைவிற்கான காரணங்களை ஆய்வு செய்து அதற்கான தீர்வை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். இந்தாண்டு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்குடன் பணியாற்ற வேண்டும் என்றார். மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகா, லோகநாதன், ஒருங்கிணைப்பு கருத்தாளர் யூஜின் மாணிக்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.