முன்வைப்புத்தொகை நிலுவை மருத்துவ கல்வித்துறை விளக்கம்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம் நிரப்புகிறது.இதில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடங்கள் பெறுவோர், பாதியில் போவதை தடுக்க, அவர்களிடம் முன்வைப்பு தொகையாக, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.ஒருவேளை கவுன்சிலிங்கில் இடங்கள் கிடைக்காவிட்டால், அவர்களுக்கு மூன்று மாதத்திற்குள், செலுத்திய பணம் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.கடந்த 2023 - 24ல் அப்படி பணம் செலுத்தியவர்களில், 979 மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்கள் தவறாக உள்ளதாகவும், அவர்களது பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.அவர்கள் மீண்டும், ddugselcom@gmail.com என்ற மின்னஞ்சலில், பிப்., 5ம் தேதிக்குள் சரியான கணக்கு விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டால், மருத்துவக் கல்வி இயக்கம் பொறுப்பேற்காது என கூறப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, tnmedicalselection.net/news/23012024024329.pdf என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.