மாற்றுத்திறனாளி மாணவருக்கு அட்மிஷன் மறுத்தால் நடவடிக்கை
உடுமலை: “மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க மறுக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை பாயும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் தலைமையில், வட்டார ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை பேசியதாவது:பத்தாம் வகுப்பு முடித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பலர், பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கப்படுவதில்லை என்ற புகார்கள் வருகின்றன. அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சேர்க்க மறுக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை பாயும். அனைத்துப்பள்ளிகளிலும் இதுகுறித்த விழிப்புணர்வுப் பதாகை வைக்கப்பட வேண்டும்.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்புப் பயிற்சிகள் குறித்து, பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.வட்டார மேற்பார்வையாளர்கள், முந்தைய ஆண்டின் நலத்திட்ட விபரங்களை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் 'எமிஸ்' இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.நடப்பு 2026 - 27ம் கல்வியாண்டிற்கான விலையில்லாப் பொருட்கள் தேவைப்படும் புதிய மாணவர்களின் விபரங்களையும் இப்போதே சேகரித்துத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களைச்சேர்ந்த, 82 ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.