அரசு கல்லுாரிக்கு மாநில முதல் பரிசு
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தின் சிறந்த செயல்பாடுகளுக்காக, மாநில அளவிலான முதல் பரிசு கிடைத்துள்ளது.இம்மன்றம், கல்லுாரி போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மேற்பார்வையில் இயங்கி வருகிறது. திருப்பூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகங்கள், விழிப்புணர்வுப் பாடல் மற்றும் நடனங்கள், தெருப்பிரசாரம் போன்ற நிகழ்வுகளை பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய நாற்சந்திகளில் தொடர்ச்சியாக நடத்தி வந்தது.மன்றத்தின் தீவிரச் செயல்பாடுகளைப் பாராட்டி, முதற்கட்டமாக திருப்பூர் மாவட்ட அளவில் முதல் பரிசை கலெக்டர் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, மாநில அளவில் உள்ள அனைத்துக் கல்லுாரிகளையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில், இம்மன்றம் மாநில அளவிலான முதலிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டது.தமிழகக் கல்லுாரிகளிலேயே சிறப்பாகச் செயல்பட்டதற்காக, முதல்வர் விஜய், கோப்பை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார்.இவ்விருதினை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் மாணவர்கள் நவீன்குமார், ரேவதி, சுலோச்சனா, பிரியங்கா, பிரவீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தினருக்கு முதல்வர் விஜய் கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அருகில், மன்ற ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன்.சுய நலமற்ற சேவைக்கான அங்கீகாரம் கல்லுாரியின் வைர விழா ஆண்டில் இந்த மாநில அளவிலான விருதைப் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இது மாணவர்களின் உள்ளார்ந்த ஈடுபாடு, ஆர்வம் மற்றும் சமூக அக்கறையோடு கூடிய சுயநலமற்ற சேவைக்குக் கிடைத்த தகுந்த அங்கீகாரம். இந்தச் சாதனை இன்னும் எண்ணற்ற மாணவர்களுக்குச் சமூக சேவையில் ஈடுபடப் பெரும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். - கிருஷ்ணன், முதல்வர், சிக்கண்ணா அரசுக் கல்லுாரி.