திருச்சி அண்ணா பல்கலை தேர்வு ஒத்திவைப்பு
திருச்சி: டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருச்சி அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி அண்ணா பல்கலையின் கீழ், திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 85க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 16ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகின்றன. திருச்சி, தஞ்சை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் இன்று நடக்கவுள்ள, நவம்பர்/டிசம்பர்- 2010ம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு, கனமழை காரணமாக ஒத்தி வைக்க, துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலை தேர்வு நெறியாளர் மதன்குமார் அறிவித்துள்ளார்.