உள்ளூர் செய்திகள்

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முதற்கட்டமாக 1000 பேருக்கு பயிற்சி: யு.ஜி.சி. துணைத்தலைவர்

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தேவராஜ் கூறியதாவது: நாடு முழுவதும், 41 நிகர்நிலை பல்கலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. அப்பல்கலைகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் பிரச்னை. இதற்காகத்தான், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன? ஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்ய, ஆந்திர மாநிலம், காக்கி நாடாவில், பல்கலை ஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மனிதவள மேம்பாட்டுத்துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள் அளிப்போம். அவர்களுக்கான சம்பளம் முழுவதையும், யு.ஜி.சி.,யே அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கல்வி மையங்கள் மூடப்படும்! பல்கலைகள் தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கே அமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம் போட்டுள்ளது.இதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது: மாநில அரசின் சட்ட அடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். பார்லி., அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்வி மையங்கள் அமைக்கலாம். நிகர்நிலை பல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்க முடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்பட முடியும். கல்வி மையங்கள் பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி, அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்கு எதிரானவர்கள் இல்லை. ஆன்-லைன் படிப்புகளை, அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்