மதுரை பல்கலைக்கழக லஞ்ச விவகாரம்: 34 பேர் மாற்றம்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைக்கல்வி இயக்ககத்தில் நடந்த லஞ்ச வேட்டையைத் தொடர்ந்து, 34 பேரை இடமாற்றம் செய்து துணைவேந்தர் கற்பக குமாரவேல் உத்தரவிட்டார். சென்னையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், மதுரை காமராஜ் பல்கலை தொலைக்கல்வி இயக்ககம் மூலம் முதுகலை படித்தார். மதிப்பெண் சான்று வழங்க உதயகுமாரிடம் தொலைக் கல்வி இயக்கக கண்காணிப்பாளர் ராமசாமி, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் அலுவலக உதவியாளர் முருகனும் கைதானார். துணைவேந்தர் கற்பககுமாரவேல் உத்தரவுப்படி, தொலைக் கல்வி இயக்ககத்தில் நிர்வாக சீரமைப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே பிரிவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோர் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது. இதன்படி உதவி பதிவாளர் அந்தஸ்தில் இருந்து அலுவலக உதவியாளர் வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே பிரிவில் பணியாற்றி வந்த 34 பேரை இடமாற்றம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டார். தொலைக் கல்வி இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது அலுவலக உதவியாளர் முருகனின் டேபிளில் வெற்று மதிப்பெண் சான்றிதழ்களை கைப்பற்றினர். அதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் அதிகாரிகள் உட்பட 15 பேருக்கு, ‘மெமோ’ வழங்கப்பட்டுள்ளது.