புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்; செப்., 4ல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!
புதுடில்லி: இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)ஐ, GSLV-F17 ராக்கெட் மூலம் செப்., 4ம் தேதி அதிகாலை 02:55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.ஜிசாட்-1ஏ என்பது இஸ்ரோ தயாரித்துள்ள ஒரு அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். தற்போது EOS-05 என்ற மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது. இந்த செயற்கைக்கோள், செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 02:55 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இது பூமியிலிருந்து 36,000 கி.மீ., உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிக்கவும், விரைவாக மீட்புப் பணிகளைத் திட்டமிடவும் இது உதவும். புவிப் படமெடுக்கும் இந்த செயற்கைக்கோள், இந்தியாவிற்குப் பூமியின் ஒரு தனித்துவமான காட்சியைக் கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.இந்தச் செயற்கைக்கோள் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் படங்களை வழங்கும் திறன் கொண்டது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட இதன் முந்தைய வடிவமான 'ஜிசாட்-1' (EOS-03) செயற்கைக்கோள், ராக்கெட்டின் கிரையோஜெனிக் அடுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை அடையாமல் தோல்வியடைந்தது.தற்போது அதற்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஜிசாட்-1ஏ திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது. கடந்த 7 மாதங்களாக இஸ்ரோ எந்தவொரு செயற்கைக்கோளையும் ஏவாமல் தற்காலிக இடைவெளி விட்டிருந்த நிலையில், இந்த ஏவுதலின் மூலம் தனது விண்வெளிப் பயணத்தை மீண்டும் துவங்குகிறது.