பகவத் கீதையில் புகுந்து விளையாடும் 4ம் வகுப்பு மாணவி
பெங்களூரு: சாதிக்கவோ, சாதனையாளர் ஆவதற்கோ வயது முக்கியமில்லை என்பதை எளிமையான முறையில் பாடம் கற்பிக்கிறார், பெங்களூரை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி.நெலமங்களா தாலுகாவில் உள்ள தடாசிகட்டா கிராமத்தை சேர்ந்த மேகனா - சன்னமூர்த்தி தம்பதிக்கு இளைய மகளாக வைணவி பிறந்தார். 2014ம் ஆண்டு பிறந்த இவருக்கு, சிறுவயதிலே மகாபாரதம், பகவத் கீதை போன்ற புனித நுால்களின் மீது ஈர்ப்பு அதிகமாக இருந்து உள்ளது.கான்வென்ட்குழந்தைகள் காமிக்ஸ் படிக்கும் வயதில், சிறுமி புனித நுால்களை படிக்க துவங்கி உள்ளார். தற்போது பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள க்ளூனி கான்வென்ட் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.பகவத் கீதையில் உள்ள சுலோகங்களை மனப்பாடம் செய்ய துவங்கினார். படித்த விஷயங்களையும், சுலோகங்களையும் பொது மேடைகளில் ஏறி பேச ஆரம்பித்தார்.ஆரம்பத்தில் மேடை பயத்தில் மனப்பாடம் செய்தவை மறந்து, சரியாக பேச முடியவில்லை. இதனால் மனமுடைந்து போனார். இதை பார்த்த சிறுமியின் அம்மா, அவருக்கு ஆறுதல் கூறி, பயிற்சிகள் கொடுக்க துவங்கினார்.விருதுஇதன்பின், மேடையில் வெளுத்து கட்ட ஆரம்பித்தார். 2020, 2021ம் ஆண்டுகளில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட பகவத் கீதை சார்ந்த போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.2021ம் ஆண்டில் சிறுமியின் திறமையைப் பாராட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளை மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருது அளிக்கப்பட்டது.விருது வாங்கிய சந்தோஷத்தில் சிறுமியும், அவரது பெற்றோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதன்பின், சிறுமி ஏறிய மேடைகளில் எல்லாம், பரிசு, விருதுகளை குவிக்க துவங்கினார்.2022ல் மைசூரில் உள்ள ஸ்ரீ சச்சிதானந்தா ஆசிரமத்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளக்கூடிய பகவத்கீதை சுலோகம் போட்டியில், முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார்.கடந்த 2023 பிப்ரவரியில், பகவத் கீதையின் மூன்று அத்தியாயங்களின், 60 சுலோகங்களை வெறும் ஐந்து நிமிடங்களில் சொல்லி, தனது மழலை குரலில் சாதனை படைத்தார். இவரது சாதனை, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்; கர்நாடகா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.சிருங்கேரி சாரதா மடத்தில் நடந்த பகவத் கீதை மனப்பாட போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தினார். பகவத் கீதையில் உள்ள சுலோகங்களை தனது விரல் நுனியில் வைத்து உள்ளார்.தற்போது பகவத் கீதையில் உள்ள 700 சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்து உள்ளார். எதிர்காலத்தில் அனைத்து சுலோகங்களையும் மனப்பாடம் செய்ய உள்ளதாக கூறுகிறார். மாவட்ட கலெக்டர் ஆவதே தன் கனவு, லட்சியம் என மழலை குரலில் கூறுகிறார்.சிறுமியை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், ஆசிரியர்கள் என பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். வைணவி படைக்கும் சாதனைகளை பார்த்து, இவரது பெற்றோர் ஆனந்த பூரிப்பில் உள்ளனர். சாதிக்க வயது முக்கியமில்லை என்பதை எடுத்து உரைக்கிறார்