என்.டி.எஸ்., தேர்வை அலட்சியம் செய்த 65 அரசு பள்ளிகளுக்கு நோட்டீஸ்
நாடு முழுவதும் தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வு, நவ.,24ல் நடக்கிறது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக இத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் "ஜீரோ"வாக உள்ளது. கடினமான தேர்வு என்பதாலும், விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் இல்லாததாலும் அரசு பள்ளி மாணவர்கள் இத்தேர்வை பெரும்பாலும் புறக்கணிக்கின்றனர். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., மாணவர்களே அதிகம் பங்கேற்றனர். இதனால், இந்தாண்டு நடக்கும் தேர்வில் "ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் குறைந்தது 90 சதவிகிதம் மாணவர்கள், பங்கேற்க வேண்டும்" என செயலர் சபிதா, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அறிவுறுத்தினர். ஆனால், மதுரை மாவட்டத்தில், 65 அரசு பள்ளிகளில் இருந்து, ஒரு மாணவர் கூட இத்தேர்வில் பங்கேற்காதது தெரிந்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மதுரை கல்வி மாவட்டத்தில் 30, மேலூர் கல்வி மாவட்டத்தில் 20, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில், 15 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருவாரத்தில் பதில் அளிக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.