உள்ளூர் செய்திகள்

டைப் - 1 சர்க்கரை நோய் பாதிப்பு தமிழக குழந்தைகளுக்கு அதிகரிப்பு

கோவை: குழந்தைகள் மத்தியில், டைப் - 1 சர்க்கரை பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ், விரைவில் நிலையான சிகிச்சை முறை வழிகாட்டுதல் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் டைப் - 1 சர்க்கரை நோய் பாதிப்பால், 2,600 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை பெறுகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், 80 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர்.இப்பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சூழலில், மத்திய, மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இயற்கை வைத்தியம்டைப் - 1 சர்க்கரை நோய் பாதிப்பு என்பது, கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில், செல்கள் மெதுவாக பாதிக்கப்படுகின்றன; 80 சதவீத செல்கள் பாதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை வெளிப்படுகிறது.சுற்றுச்சூழல், மரபணு, வைரஸ் பாதிப்பு, அதிக மன அழுத்தம் போன்றவை இப்பாதிப்புக்கு காரணியாக இருக்கலாம் என்று, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வகை பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுதும் முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.இன்சுலின் ஊசி அல்லது மருந்துகளை தினந்தோறும் எடுத்துக்கொள்வது அவசியம்.அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு துறை தலைவர் டாக்டர் சசிகுமார் கூறியதாவது:இன்சுலின் சுரப்பி குறைபாடு காரணமாக, டைப் - 1 சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக இப்பாதிப்புடன் வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல், அதிக பசி, எடை குறைதல், உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுகள், வழக்கத்தைக் காட்டிலும் மூச்சு வாங்குதல், வயிற்றுவலி போன்றவை இதன் அறிகுறிகள்.பெற்றோர் கவனமுடன் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். பலர் கோவில், ஆன்மிகம், இயற்கை வைத்தியம் என சென்று, உடல் மோசமான நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர்.இக்குழந்தைகளுக்கு, இனிப்புகள், குளிர்பானங்கள், சர்க்கரை, உருளைக்கிழங்கு, மாம்பழம், பலாப்பழம், சாஸ், ஜாம், துரித உணவுகளை தவிர்த்து, சத்தான காய்கறிகள், கீரைகள், வேர்க்கடலை, பாசிப்பயறு, கேழ்வரகு, கொய்யாக்காய், முலாம்பழம், முட்டைக்கோஸ், மற்றும் வயதுக்கு ஏற்ப புரதச்சத்து உணவுகளை கொடுக்க வேண்டும்.இயல்பான வாழ்க்கைஇப்பாதிப்புள்ள குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை இல்லை எனில், கண், நரம்பு, கிட்னி பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.ஹைப்போ தைராய்டிசம் மற்றும் சீலியாக் மற்றும் பிற ஆட்டோ இம்யூன் பாதிப்புகள் வரலாம். பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முறையான சிகிச்சை இருந்தால், இக்குழந்தைகள் பிறரை போல் இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தேசிய சுகாதார திட்ட இயக்குநர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, டைப் - 1 சர்க்கரை பாதிப்புக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்காக பிரத்யேக நிலையான சிகிச்சை முறை வழிகாட்டுதல், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்