மாணவி மரணத்தில் சந்தேகம்: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு
சென்னை: பள்ளி மாணவியின் மரணம் குறித்து, 2 மாதங்களில் விசாரணையை முடித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் கே.நாராயணன். இவரது மகள், அங்குள்ள பள்ளியில், ஒன்பதாவது வகுப்பு படித்து வந்தார். 2011, செப்டம்பரில் மாணவி இறந்து விட்டார். மகளின் மரணம் குறித்து, கொரட்டூர் போலீஸ் நிலையத்தில், நாராயணன் புகார் கொடுத்தார். விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, வேறு புலனாய்வு ஏஜன்சியின் விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: கடந்த, 2011ல், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தான் மனுதாரரின் குறை. பள்ளி மாணவியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம், முறையான விசாரணை மூலம் தீர்வு காண வேண்டும். குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தெரிய வந்தால் சட்டப் பிரிவை மாற்றி, அதன்படி, விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. புலன் விசாரணை குறித்து சிறுமியின் தந்தையின் மனதில் நம்பிக்கையை போலீசார் ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் அது தான் முக்கியம். இல்லையென்றால், போலீஸ் அதிகாரிகள் எவ்வளவு தான் நல்ல முறையில் பணிகள் செய்தாலும், அதை விமர்சிக்கும் சூழல் ஏற்படும். இந்த வழக்கைப் பொறுத்தவரை அம்பத்தூரில் உள்ள துணை கமிஷனர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். எப்படியானாலும், இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கையை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.