மதுரை புத்தகத் திருவிழா; 200 ஸ்டால்களுக்கு ஏற்பாடு
மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம், புத்தக பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)சார்பில் தமுக்கம் மைதானத்தில் செப்.6 முதல் 16 வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கின்றன. புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள்,சாலமன்பாப்பையா, ஞானசம்பந்தன், ராஜா உட்படபட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம், உணவுக் கூடங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.செப்.6 ம் தேதி அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதா துவக்கி வைக்கின்றனர். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். பள்ளி மாணவர்கள் வந்து செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது. அனுமதி இலவசம்.மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லவும், அவர்களுக்கு உதவவும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் வீல்சேர் உட்பட உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பர் என செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.