இயங்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை: 6ம் இடத்துக்கு சரிந்தது தமிழகம்
புதுடில்லி: நாட்டில் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2019ம் ஆண்டு, 76,000 நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 1.18 லட்சமாக அதிகரித்துள்ளது.உயர்வுஇருப்பினும், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் ஆறாம் இடத்தில் தான் உள்ளது. கடந்த 2019ல் நான்காவது இடத்தில் இருந்தது. தற்போது, மஹாராஷ்டிரா முதலிடத்திலும், டில்லி, உ.பி., மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில், உத்தர பிரதேசத்தில் தான், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.இயங்காத, மூடப்பட்ட நிறுவனங்கள், திவால் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை நீக்கிய பின் உள்ள நிறுவனங்களை, செயல்பாட்டில் உள்ளவையாக மத்திய அரசு கருதுகிறது. இதன் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், செயல்பாட்டில் உள்ளவற்றின் எண்ணிக்கை 59.50 சதவீதத்திலிருந்து, 64.40 சதவீதமாக உயர்ந்துள்ளது.வலுவான வளர்ச்சிநாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி சூழல், கட்டுப்பாடுகள் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிகளை தளர்த்தியது, சிறிய குற்றங்களுக்கான தண்டனையை நீக்கியது போன்ற முடிவுகளால், வணிகம் செய்யும் சூழல் எளிமையாக்கப்பட்டு, இதற்கு வழிவகுத்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களில், சேவைகள் மற்றும் கட்டுமான துறையின் பங்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில், அரசு உதவி பெறும் சமுதாய, தனி நபர் சேவை நிறுவனங்களின் பங்கு அதிகரித்துள்ளது. தயாரிப்பு, வர்த்தக பிரிவின் பங்கு மாற்றமின்றி உள்ளது.