உள்ளூர் செய்திகள்

மாணவர்களிடம் போதை கலாசாரம்!

திருப்பூர்: போதை... பலரது வாழ்க்கை பாதையை அதலபாதாளத்துக்கு தள்ளிவிடுகிறது. சமீப காலமாக, இந்த போதை பழக்கம், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மத்தியிலும் விஷக்கிருமி போல் பரவ துவங்கியிருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. போதையால் பாதை மாறும் மாணவர்கள் குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் வேதனையுடன் கூறியதாவது:திருப்பூரில் எந்தளவு தொழில் வளர்ச்சி பெறுகிறதோ, அந்தளவு குற்றங்களுக்கு துணைபுரியும் பிற சம்பவங்களும் வளர்ந்து கொண்டே வருகிறது. பள்ளி அருகிலேயே போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதுதொடர்பாக போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் சில மாணவர்களே, போதைப் பொருள் விற்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் கண்காணிப்பு இல்லாததால், மாணவர்கள், பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.பெற்றோரை அழைத்து கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டாலும், 90 சதவீதம் பெற்றோர் கூட்டத்துக்கு வருவதில்லை. பெற்றோர், தங்கள் குழந்தைகளை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பள்ளி, கல்லுாரிகள் அருகே, பெட்டிக்கடைகளில் போதைப்பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில முதல்வர், காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டும், அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசாரின் செயல்பாடுகளை பொறுத்தே, அதன் பலன் கிடைக்கிறது.ஆனால், சில இடங்களில், போதை பொருட்கள் விற்பனை கும்பலுக்கு, போலீசாரே உடந்தையாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பான் பராக், குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீசார், அவர்களிடம் இருந்து கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, கைது நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் காப்பாற்றிவிடுகின்றனர் என்பதும் பரவலாக பேசப்படுகிறது.அதனடிப்படையில், டாஸ்மாக் மதுக்கடைகள் போன்று, போதைப் பொருள் விற்கும் நபர்களும், போலீசாருக்கு மாதந்தோறும் மாமூல் வழங்கிவிட்டு, தங்கள் தொழிலை, தடையின்றி தொடர்கின்றனர் என நேர்மையான சில போலீஸ் அதிகாரிகளே கூறுகின்றனர்.எங்கள் மாவட்டத்தில், போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என, ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.,யும் உறுதி எடுத்து, தடுத்து காட்ட வேண்டும் என, சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால், இந்த இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பள்ளி, கல்லுாரிகள் அருகேயுள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி, பான்பராக், குட்கா பறிமுதல் செய்து வருகிறோம்; கடந்த நவ., முதல் தற்போது வரை 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர் மாநகர போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்