உள்ளூர் செய்திகள்

படிப்பு முக்கியம் கண்ணுங்களா!

காரமடை: காரமடை கல்வி வட்டாரத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் வீடு,வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காரமடை கல்வி வட்டாரத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உட்பட பகுதிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலை என, 144 பள்ளிகள் உள்ளன; இதில் 96 துவக்கப் பள்ளிகள் அடங்கும். தற்போது இப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று, அரசுப் பள்ளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், குறிப்பாக, காலை உணவு திட்டம், உதவித்தொகை திட்டம் உட்பட திட்டங்களை, பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி மாணவர் சேர்க்கையில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தவிர, அரசுப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டி, பள்ளி மேலாண்மை குழு வாயிலாக ஏற்படுத்தப்படும் போக்சோ சட்டம் விழிப்புணர்வு, 'குட் டச்', 'பேட் டச்' போன்ற விழிப்புணர்வு, மலை கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர ஆட்டோ, ஜிப் போன்ற இலவச வாகன வசதி ஏற்பாடு ஆகியவை மக்கள் மனதில் வரவேற்பை பெற்றுள்ளன.இது குறித்து, காரமடை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:கடந்தாண்டு சுமார் 250க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்தோம். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், துவக்கப் பள்ளிகளுக்கு சென்று, அங்கு 5ம் வகுப்பு படிப்பை முடிக்கும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 6ம் வகுப்பை, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்தி வருகின்றனர். இதே போல், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பு படிப்பை முடிக்கும் மாணவர்களும், 9ம் வகுப்பு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும், பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவுரை கூறி, மீண்டும் தேர்வு எழுத விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம். பள்ளிப்படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள் சிலருக்கு, ஐ.டி.ஐ., படிக்கவும், டிப்ளமோ படிக்கவும் பரிந்துரைத்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இதுதொடர்பாக எங்களுடன் இணைந்து காவல்துறையும், குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்