எஸ்.எஸ்.ஏ., பள்ளிகளுக்கு ரூ.1.95 கோடி மானியம்
மதுரை: மதுரை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, பராமரிப்பு மற்றும் பள்ளி மானியமாக ரூ.1.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளி மானியமாக 1540 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு, ரூ.1.4 லட்சம் மானியம் நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், கல்வி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் உட்பட பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 1229 அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக ரூ.90 லட்சத்து 83 ஆயிரத்து 500 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிகளிலுள்ள கழிப்பறைகள் மேம்படுத்துவது, கை கழுவுமிடம் பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி கூறியதாவது: நடப்பாண்டிற்கு ரூ. 1.95 கோடி மானியம் சம்பந்தப்பட்ட பள்ளி கிராம கல்விக் குழு அல்லது மேலாண்மைக் குழுக்கள் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தேவை அடிப்படையில் பொருட்கள் வாங்குவதற்கு இந்நிதியை செலவிட வேண்டும். நிதி ஒதுக்கீடு விவரத்தை பள்ளி தகவல் பலகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். செலவு விவரங்களை மாணவர்கள் கண்காணிக்கலாம், என்றார்.