ஏழை மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக பயிற்சியளிக்கும் முன்னாள் மாணவர்கள்
கோவை: அரசு கலைக்கல்லுாரியில் 1996-1999ம் ஆண்டுகளில் பி.காம்., படித்த முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு திறன் பயிற்சி வழங்கி வருகின்றனர்.கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள், தொழில்முறை தகவல் தொடர்பு, நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது, கணக்கியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக ஏழை மாணவர்களின் படிப்புக்கு, புத்தகங்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த முயற்சியின் பலனாக, கடந்த ஆண்டுகளில் படித்த பல மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.இக்கல்லுாரியின் முன்னாள் மாணவரும், ஆடிட்டருமான பிரகாஷ் கூறியதாவது:நாங்கள் படித்த போது நேர்முகத் தேர்வு, குழு விவாதம், 'ரெஸ்யூம்' தயாரிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் வேலை தேடும் காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம்.அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு, இந்த சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பயிற்சி வழங்கி வருகிறோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் 'வாட்ஸ்அப்' குழு மூலம் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து, அவர்களை வாழ்வில் உயர்த்தும் பணியை தொடர்ந்து செய்வோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.