சமச்சீர் கல்வியை 2011-12ல் கொண்டுவர முடியாது-தமிழக அரசு வாதம்
சமச்சீர் கல்வி குறித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது. விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில், சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும், இது குறித்து இன்னொரு குழு அமைத்து முழு விவர அறிக்கை வந்தவுடன், பாடப் புத்தகத்தில் மாற்றங்கள் செய்து அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்போம் என வாதிடப்பட்டது. தமிழக அரசின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர். நாளைய தினம், மாணவர்களின் பெற்றோர் சார்பிலும், பொதுநலன் விரும்புவோர் சார்பிலும் வாதாடப்படும். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் சமச்சீர் கல்வி குறித்து தீர்ப்பளிக்க இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை பள்ளியில் எந்தப் பாடத்தை நடத்துவது என்ற குழப்பம் நீடிக்கும். சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.