ஓராண்டில் 12 மாணவர்களின் உயிரைப் பறித்த ராகிங்!
ராகிங் வழக்குகளில் ஆந்திர மாநிலம் முன்னணியில் உள்ளது. அந்த மாநிலத்தில் 12 ராகிங் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 4 மாணவர்கள் இறந்துள்ளனர். ஒரு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்தில் தலா 10 வழக்குகளும் பஞ்சாபில் 8 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்பது கல்வி நிறுவனங்களிலிருந்து ராகிங்கை ஒழிப்பதற்கான கியூர் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்விலிருந்து இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 88 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 12 பேர் இறந்து போனார்கள். 5 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 89 ராகிங் வழக்குகள் பதிவாகியுள்ளது. 11 பேர் இறந்து போனார்கள். 5 பேர் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரியவந்துள்ளது. ராகிங்கை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்கூட, நிலைமை மேம்படவில்லை என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்று கியூர் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஸ் அகர்வால் தெரிவித்துள்ளார். சிறிய மாநிலமாக இருந்தாலும்கூட, பஞ்சாப் கல்வி நிறுவனங்களில் ராகிங் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டுகளில் ராகிங் வழக்குகள் பதிவாகாத இமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிங்களில் இந்த ஆண்டில் அதிக அளவிலான ராகிங் வழக்குகள் பதிவாகியுள்ளன. இமாசல பிரதேசத்தில் மருத்துவ மாணவர் அமான் குச்ருவின் மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து, ராகிங்கைத் தடுக்க பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.