உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 13வது இடத்திற்கு தள்ளப்பட்ட கோவை

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக நான்காவது இடத்தை தக்கவைத்த கோவை, இந்தாண்டு 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கோவை மாவட்டம், 96.66 சதவீத தேர்ச்சியுடன், மாநில அளவில் 13வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 35,448 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 34, 264 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நான்காவது இடத்தை கோவை பிடித்தது.2022ல் - 96.91; 2023ல் - 97.57; 2024ல் - 96.97; 2025ல் - 97.48 என தேர்ச்சி சதவீதம் பதிவாகியிருந்தது. 2019 பொதுத் தேர்விலும், 95.01 தேர்ச்சி சதவீதம் பெற்று நான்காவது இடம் பிடித்தது.கடந்தாண்டை விட, 0.82 சதவீதம் தேர்ச்சி விகிதம் மட்டுமே குறைவு என்றாலும், மற்ற மாவட்டங்கள் அதிக தேர்ச்சி விகிதத்துடன் மாநில தரவரிசையில் முன்னிலை இடங்களை பிடித்துள்ளன.கோவை மாவட்டத்தில், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை முறையாக கண்காணித்து சிறப்பு கவனம் செலுத்தாததே, இதற்கு முக்கிய காரணமாக கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தோல்வியுற்ற, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்திருக்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.இது குறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத்தேர்வு பாடத்திட்டம், வேலைநாட்களுக்குள் முழுமையாக முடிக்கும் வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் நிர்வாகப் பணிகள் காரணமாக பாடங்களை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட கற்றல் மேம்பாட்டு பணிகளும் பாதிக்கின்றன. நடப்பாண்டு பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.இதனால், இறுதிகட்ட தேர்வு பணிகளில் ஆசிரியர்களால் கவனம் செலுத்த சிரமப்பட்டோம். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டுமெனில், கல்வி சாராத பணிகளை குறைத்து, ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், “கடந்தாண்டை விடவும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினோம். சிறப்பு வகுப்புகள், பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் முறையாக நடைபெற்றன. தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தை கண்டறிய பள்ளி வாரியாக பகுப்பாய்வு செய்து வருகிறோம். இனி வரும் கல்வியாண்டுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்