பிளஸ் 2 தேர்வை 21,391 மாணவர்கள் எழுதினர் - 339 பேர் ஆப்சென்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வை நேற்று 21 ஆயிரத்து 391 மாணவர்கள் எழுதினர். 339 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகத்தில் பிளஸ் - 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 51 மையம், பழநி கல்வி மாவட்டத்தில் 37 மையம் என 88 தேர்வு மையங்களில் 216 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 481 மாணவிகள், 9 ஆயிரத்து 910 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 391 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.பிளஸ் 2 தேர்வுக்காக மாவட்ட அளவில் 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையம், 4 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 8 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்கான மையமாகச் செயல்படுகிறது. இத்தேர்வு மையங்களில் 585 பேர் தேர்வு எழுதுகின்றனர். 184 மாற்றுத்திறன் மாணவர்கள் கூடுதல் சலுகை நேரம் கோரி விண்ணப்பித்து உள்ளனர். சொல்வதைக் கேட்டு எழுதுபவர் கோரி 154 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்காக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பாசிரியர்கள் மூலம் பயிற்சியும், தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.தேர்வு கட்டுக்கள் தேர்வு மையங்களுக்கு 23 வழித்தடங்களில் வழித்தட அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. 1,105 கண்காணிப்பாளர்கள், 123 பறக்கும் படைகள், 190 ஆசிரியர்கள் நிலையான படை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 1,540 பேர் பிளஸ் 2 தேர்வுப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வை நேற்று 21 ஆயிரத்து 52 மாணவர்கள் எழுதினர். 339 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், தேர்வு குறித்து கலெக்டர் சரவணன், சி.இ.ஓ., உஷா ஆய்வு செய்தனர். கல்வித்துறை அதிகாரிகள், தேர்வு பறக்கும் படையினர் கலந்து கொண்டனர்.