உள்ளூர் செய்திகள்

அன்புள்ள தாத்தா -பாட்டிக்கு... கடிதம் எழுதும் போட்டி!

கோவை: தங்கள் தாத்தா, பாட்டிக்கு கடிதம் எழுதும் அரிய வாய்ப்பு, பள்ளி மாணவ, மாணவியருக்கு கிடைத்துள்ளது.'கோவை விழா' 18வது எடிஷன், கோவையில் நாளை முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை விழா குழுவுடன் இணைந்து, கோவை தபால் கோட்டம், 'பேரன்பு' என்ற தலைப்பில், தாத்தா - பாட்டிக்கு கடிதம் எழுதும் செயல்பாட்டை, இந்த ஆண்டும் செயல்படுத்துகிறது.இன்றைய மின்னணு உலகில், கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இதை மீட்டெடுத்து குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகள் தங்களது அன்பு, மரியாதை மற்றும் நன்றியை, தாத்தா, பாட்டிக்கு தெரிவிக்கும் வகையிலும், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அனைத்து பள்ளி குழந்தைகளும் கடிதம் எழுதலாம்.பள்ளியின் வாயிலாக வழங்கப்படும் இன்லேண்ட் லெட்டரில், குழந்தைகள், தங்கள் அன்பு, மரியாதை மற்றும் நன்றியை, தங்களது தாத்தா பாட்டிக்கு முழு தபால் முகவரியுடன் எழுதி அனுப்பலாம்.இந்த கடிதம் எழுதும் இயக்கத்தில் பங்கு பெற விரும்பும் பள்ளிகள், அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம். வரும் 24ம் தேதி வரை சேகரிக்கப்படும் இந்த கடிதங்கள், 'கோவை விழா'வின் முடிவில், அவரவர் தாத்தா, பாட்டிக்கு, தபால்காரர் வாயிலாக அவர்கள் வீடுகளில் பட்டுவாடா செய்யப்படும்.கூடுதல் விபரங்களுக்கு, அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்