உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: அக்.30க்குள் புதிய மையங்களுக்கான பரிந்துரைக்கு உத்தரவு

விருதுநகர்: "10ம்வகுப்பு பொதுத்தேர்விற்கு கல்வி மாவட்ட வாரியாக புதிதாக மையங்கள் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அக்.30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு(டி.இ.ஓ.) அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஏப்ரலில் நடக்கவுள்ள 10ம்வகுப்பு அரசு பொதுத்தேர்விற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் நலன்கருதி அத்தேர்விற்கு கல்வி மாவட்டம் வாரியாக புதிதாக தேர்வு மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரையை மாவட்ட கல்வி அதிகாரிகள் அக்.30க்குள் சென்னையில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில் "கடந்த கல்வியாண்டில் தங்கள் ஊரில் இருந்து பல கிலோ மீட்டர் பயணம் செய்து இத்தேர்வு எழுதிய சில பகுதி மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். தங்கள் பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் படித்த பள்ளிகள் தரப்பில் தேர்வுத்துறை இயக்ககத்திற்கு கோரிக்கை சென்றது. மேலும் ஆண்டுதோறும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதன்படியே இந்தாண்டு புதிய தேர்வு மையம் அமைக்க பரிந்துரை செய்ய வலியுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 150 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குரிய காற்றோட்டமான வகுப்பறைகள் குடிநீர் கழிப்பறை மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளைக்கொண்ட பாதுகாப்பான எந்த சர்ச்சையிலும் சிக்காத பள்ளிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட உள்ளது. இறுதி முடிவை தேர்வுத்துறை எடுக்கும். பிளஸ் 2 பொதுத்தேர்விற்கு புதிய மையம் அமைப்பதற்கான பரிந்துரைகள் சி.இ.ஓ.க்கள் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்