உள்ளூர் செய்திகள்

பெரி அறக்கட்டளை - எஸ்.ஆர்.எம்., பல்கலை நில விவகாரம்: சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு

சென்னை: 'பெரி' கல்வி மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏலம் விடப்பட்டது தொடர்பாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பெரி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், நிலத்தை ஈடாக காட்டி, 48 கோடி ரூபாய் கடன் பெற்றது. கடன் தொகையை, உரிய காலத்தில் திரும்ப செலுத்தாததால், வங்கி நிர்வாகம், நிலத்தை ஏலத்தில்விட்டது.எஸ்.ஆர்.எம்., குழுமம் நிலத்தை ஏலம் எடுத்தது. இந்நிலையில், வங்கி அதிகாரிகளுக்கு எதிராக, சி.பி.ஐ.,யிடம் 'பெரி' அறக்கட்டளை நிர்வாகம் புகார் அளித்தது.புகாரில், 'இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள், ஏலத்தில் சொத்தை வாங்கிய, எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் கூட்டு சேர்ந்து, மிக உயர்ந்த மதிப்புள்ள அடமான சொத்துக்களை, மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்' என, குறிப்பிட்டிருந்தனர்.இந்த புகாரின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், 'பெரி' அறக்கட்டளை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “வங்கி அதிகாரிகள், சொத்துக்களை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு, மிகக் குறைந்த விலையில் ஏலத்தில் விற்றுள்ளனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு, முறையற்ற ஆதாயத்தை வழங்கும் வகையில் ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை அவசியம்,” என்றார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்