நீட் கட்-ஆப் உயர வாய்ப்பு
சென்னை: 'மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு சற்று கடினமாக இருந்தது' என, மாணவர்கள் தெரிவித்தனர்.நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான, நீட் தேர்வு மே, 3ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 8ல் துவங்கி மார்ச் 8 வரை நடந்தது.நாடு முழுதும் 22.70 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தமிழகத்தில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். நேற்று தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை உட்பட 30 நகரங்கள் என, நாடு முழுதும், 552 நகரங்களில் 5,500 மையங்களில், நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. மதியம், 02:00 மணிக்கு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, மாணவ, மாணவியர், காலை, 11:30 மணி முதலே, தேர்வு மையங்களுக்கு வர துவங்கினர்.தேர்வு மைய நுழைவு வாயிலில், மாணவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். நடப்பாண்டு ஆடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதனால், பாதுகாப்பு சோதனைகள் விரைவாக நிறைவடைந்து, மாணவர்கள் தேர்வு அறைகளுக்கு சென்றனர். மதியம் 02:00 மணிக்கு தேர்வு தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் உட்பட, 13 மொழிகளில் தேர்வு நடந்தது.இயற்பியல் பாடத்தில் இருந்து, 180 மதிப்பெண்களுக்கு, 45 வினாக்கள்; வேதியியல் பாடத்தில் இருந்து, 180 மதிப்பெண்களுக்கு 45 வினாக்கள்; உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கு 90 வினாக்கள் என, மொத்தம் 180 வினாக்கள், 720 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டன. மதியம் 02:00 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 05:00 மணிக்கு நிறைவடைந்தது.தேர்வு முடிந்து மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவியரை, நுழைவு வாயிலில் காத்திருந்த பெற்றோர், கைகளை தட்டி உற்சாகமாக வரவேற்றனர். தேர்வு எழுதிய தங்கள் குழந்தைகளை முத்தமிட்டு வாழ்த்தினர். தேர்வு சற்று கடினமாக இருந்தது, தேர்வுக்கு நேரம் போதவில்லை என, பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்.தேர்வு சற்று கடினமாக இருந்தாலும், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவ படிப்புக்கான, 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பெற்றோர் அவதிசென்னையில், 43 மையங்களில், நேற்று 'நீட்' தேர்வு நடந்தது. மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து, ஏராளமான மாணவ, மாணவியர், தங்கள் பெற்றோருடன், தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். மாணவர்கள் தேர்வு எழுத சென்ற நிலையில், பெற்றோர் ஆங்காங்கே சுட்டெரிக்கும் கோடை வெயிலில், தங்களின் பிள்ளைகளுக்காக காத்திருந்தனர்.