உள்ளூர் செய்திகள்

50 சதவீத அரசு பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடம் காலி?

பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 50 சதவீத அரசு பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு, கல்வி எவ்வளவு முக்கியமோ அதுபோல், உடல் நலனை பேணிக் காப்பதும் அவசியமாகிறது. உடல் நலனைக் காக்கவும், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், அனைத்து பள்ளிகளிலும் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களின் திறமைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர உதவுகின்றன. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 50 சதவீத அரசு பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள தகவல் கிடைத்துள்ளது.மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம், 1,800க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கோரப்பட்டது.இதில், தகவல் பெறப்பட்ட, 50 பள்ளிகளில், 30 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் கிடையாது என பதில் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பாடப் பிரிவுகளுக்கும், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோல்,50 சதவீத பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது.இரண்டு நாட்களுக்கு முன், திருப்பூர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, தொழில்துறையில் மட்டுமல்ல... விளையாட்டிலும் திருப்பூர் நம்பர் 1தான் என்றார்.உடற்பயிற்சி ஆசிரியரே இல்லாமல், திருப்பூர் எவ்வாறு விளையாட்டுத்துறையில் நம்பர் 1ஆக வர முடியும் என்பதுடன், மாணவர்கள் எவ்வாறு மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.மாவட்டத்தில் காலியாக உள்ள உடற்பயிற்சி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்பி, தமிழக மாணவர்கள் விளையாட்டிலும் தடம் பதிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்