2,500 டாக்டர்கள் பணியிடம் காலி; எம்.ஆர்.பி., தேர்வு நடத்த கோரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,500 டாக்டர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்த வேண்டும்' என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத் அளித்த பேட்டி:
மாநில அரசு ஒதுக்கீட்டில், 1,600 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இடங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மருத்துவ தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., சார்பில் தேர்வுகள் நடத்தப் படாமல் உள்ளன. சிரமமாக உள்ளது
ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை, 'நீட்' தேர்வில், 7,000 பேர் வரை, அரசு பணியில் இல்லாத டாக்டர்கள் தேர்ச்சி பெற்றாலும், இடங்கள் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே, ஏற்கனவே வழங்கப்பட்டது போல, அரசு டாக்டர்கள் அல்லாதவர்களுக்கும் அனுபவ மதிப்பெண் அளிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், அரசு பணியில் இல்லாதவர்களும், முதுநிலை மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.தற்போது இளம் டாக்டர்கள் மத்தியில், வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாகி உள்ளது. பணிச்சுமை
டாக்டர்களுக்கு நியாயமான ஊதியத்துடன் கூடிய, தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத சூழல் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்பாததால், அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால், நோயாளிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, காலியாக உள்ள 2,500 அரசு உதவி டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப, எம்.ஆர்.பி., தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.