சென்னை: 'தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் நடந்துள்ள ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளிப்பாரா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். ஒப்புதல் அளிப்பாரா?
அவரது அறிக்கை:மத்திய அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், 100 நாள் வேலை திட்டத்திற்காக, தமிழக வரலாற்றிலேயே, அதிகபட்சமாக 39,339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளில் தி.மு.க., சிக்கி உள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தில் நடந்துள்ள ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளிப்பாரா?இந்த ஊழலின் அளவை பொதுமக்கள் புரிந்து கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை மட்டும் சுட்டிக்காட்டி இருக்கிறோம். தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக கிராமப்புற மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், தமிழகத்தை விட குறைவான நிதியை பெற்றுள்ளன. இது முதல்வருக்கு தெரியுமா? ஊழல் கட்சி
நுாறு நாள் வேலை திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 நாட்களாக உயர்த்துவதாக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதை எப்போது நிறைவேற்றப் போகிறார். கடின உழைப்பாளிகளான, தமிழக மக்களுக்கு சேர வேண்டிய நிதியை கொள்ளை அடித்துள்ள தி.மு.க., வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; மோசடியான, இரக்கமற்ற பிரிவினையை துாண்டும் கட்சி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.