உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்குவாதம் செய்யாதீங்க; சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நன்னடத்தை பயிற்சி

வாக்குவாதம் செய்யாதீங்க; சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நன்னடத்தை பயிற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, நன்னடத்தை பயிற்சி அளிக்கப்பட்டது.மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம் செயல்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு விளைவிக்கும் நோக்கில் செயல்படும் அனைத்து செயல்களையும் கண்காணித்து மீட்பது, அவர்களது பணி. பெரும்பாலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பர்.

பறிமுதல்

அதிலும், வெளிநாடுகளுக்கு சென்று, விமானங்களில் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், போதைப் பொருள் போன்றவற்றை கடத்துவோரை பிடித்து, கடத்தல் பொருட்களைப் பறிமுதல் செய்வர்.சுங்கத்துறை அதிகாரிகள், பயணியரை விசாரிப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் பணிச்சுமை, பயணியர் ஒத்துழைப்பு இல்லாதது போன்ற, பல்வேறு காரணங்களால், அதிகாரிகள் பயணியரிடம் சத்தமிடுவது, வாக்குவாதம் செய்வது, கோபமாக நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள், அவ்வப்போது நடந்து வந்தன. சென்னை விமான நிலையத்தில், கடந்த காலங்களில் இருந்த சுங்க அதிகாரிகள் சிலர், இலங்கை பெண் பயணியிடம், தாலி செயினை வற்புறுத்தி கழட்ட வைத்து பறிமுதல் செய்த சம்பவம், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கான நன்னடத்தை பயிற்சி, கடந்த 15ம் தேதி முதல் மூன்று நாள் நடந்தது. இதில் பயணியரை பொறுமையாக கையாள்வது, கோபப்படாமல் நிதானமாக விசாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அனுபவம்

இது குறித்து, சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பயணியருக்கு சுங்கத்துறையால் முன்பு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், என்.ஏ.சி.ஐ.டி., அகாடமியுடன் இணைந்து, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானத்தில் களைத்து போய் வரும் பயணியர், சோதனை என்றாலே சிரமமாக பார்ப்பர். அப்போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் வாக்குவாதம் செய்வர். இப்படிப்பட்ட சூழலை, எப்படி கையாள வேண்டும் என தெளிவுப்படுத்தி உள்ளோம். குழுவாக இணைந்து பணி செய்ய வேண்டும். மதம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் எதிர்கொள்ளும்

10 'டாப்' சவால்கள் பயணியர் வெளிப்படுத்தும் கோபம் விசாரணையின் போது ஒத்துழைக்க மறுத்தல் உடைமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை வீண் வாதம் முக்கிய பிரமுகருக்கு வேண்டப்பட்டவர்கள் எனக் கூறி சோதனைக்கு மறுப்பது  பொருட்களுக்கு வரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டுவது பயணியர் முன் சத்தமிட்டு திசை திருப்புதல் தெரியாதது போல நடந்து கொள்ளுதல் எவ்வளவு பொருட்கள் எடுத்து வரலாம் என்பது தெரியாதது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ananymous
ஜூலை 20, 2025 08:57

எத்தனை காரணங்கள் சொன்னாலும் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் செய்கை மிகுந்த எரிச்சலை தருவதாகவும் அல்ப்பதனமான கேள்விகளும் மோதல் சூழ்நிலை உருவாக்குகிறது


Padmasridharan
ஜூலை 20, 2025 08:23

காக்கி சட்டை சீருடை அணிந்தவர்களும் கடற்கரை போன்ற பொது இடங்களில் ஒரு சில குறிப்பிட்ட இடத்தை விட்டு மக்களை போகச்சொல்கின்றனர். போகவில்லயெனில் அவர்களின் வேலையை செய்யவிடாமல் தடுக்கிறீர்களென்று சொல்கிறார்கள். பின்புதான் தெரிந்தது அக்குறிப்பிட்ட இடங்களில் குற்றங்களை செய்யத்தூண்டுவதும் அவர்களிடமிருந்து சீருடையில் உள்ளவர்கள் பணம்/பொருள் புடுங்குவதும் நடக்கின்றது . சென்னை, திருவான்மியூர் கடற்கரையிலிருந்து


சமீபத்திய செய்தி