உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாக்.,கை அம்பலப்படுத்தும் இந்திய துாதர்கள்

பாக்.,கை அம்பலப்படுத்தும் இந்திய துாதர்கள்

புதுடில்லி: உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதோடு, நம் தரப்பு நியாயத்தையும், ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவதில், நம் துாதர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற ராணுவ நடவடிக்கை வாயிலாக, பாக்.,கில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் படையினர் தகர்த்தனர். இதையடுத்து, இந்தியா -பாக்., இடையே போர் மூண்டுள்ள சூழலில், உலக நாடுகள் மத்தியில், நம் தரப்பு நியாயங்களையும், பயங்கரவாதத்தை மட்டுமே குறி வைத்து நாம் நடத்தும் யுத்தம் குறித்து விளக்குவதிலும், ஒவ்வொரு நாடுகளில் உள்ள இந்திய துாதர்களின் பணி அளப்பரியது.போர்க்களத்தில் வியூகங்களை அமைத்து படைகளை வழி நடத்திச் செல்லும் ராணுவ ஜெனரல்களைப் போலவே, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கியதில் இருந்தே, சிக்கலான மற்றும் முக்கியமான நாடுகளில், நம் துாதர்கள், மிகச் சிறப்பாக வியூகம் அமைத்து ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியாவுக்கு உலகின் ஆதரவை திரட்டுவதோடு, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாக்., காட்டும் போலித்தனத்தையும் அம்பலப்படுத்துகின்றனர். அந்தந்த நாட்டு அரசுகள், அங்கு பணியாற்றும் மற்ற நாடுகளின் துாதர்கள், அங்குள்ள 'டிவி' மற்றும் பத்திரிகைகள் என இடைவிடாமல் தொடர்பு கொண்டு விளக்கம் அளிப்பதில், நம்முடைய 200க்கும் மேற்பட்ட துாதர்களும் துாதரகங்களும் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர்.பிரிட்டனில், இந்திய துாதராக இருக்கும் விக்ரம் துரைசாமி, அங்குள்ள 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பாகிஸ்தானில் நம் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், ஐ.நா.,வால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதி பங்கேற்றதையும், அவருக்கு அருகே பாக்., ராணுவ அதிகாரி நிற்கும் படத்தையும் நேரலையிலேயே காட்டினார். மேலும், 'பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்தும் ஒரு அரசு எப்படி இருக்கும்' எனவும் கேள்வி எழுப்பினார்.அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் குவாத்ராவும், 'டிவி' சேனலுக்கு அளித்த நேரலை பேட்டியின்போது, இந்தியா தரப்பு நியாயங்களை ஆதாரங்களுடன் கூறினார். அமெரிக்க பத்திரிகையாளர்கள், 'இது பாக்.,கை சேர்ந்த முஸ்லிம்களுக்கும், இந்தியாவின் ஹிந்துக்களுக்கும் நடக்கும் போரா?' என கேட்டபோது, ஒன்பது பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தகர்த்ததை சுட்டிக் காட்டி, 'பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இது' என தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளித்தார்.இதற்கிடையே, சர்வதேச நிதியத்திடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடன் தொகை வழங்குவதை தடுத்து நிறுத்துவதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளையும் இந்தியா துவங்கியது.போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை