கும்பமேளாவும், தமிழகமும்!
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். நம் நாடு எப்படி ஒற்றுமையாக இருக்கிறது என்ற பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில், இந்த மஹா கும்பமேளா நடந்து வருவது மகிழ்ச்சியை அளக்கிறது.நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை, நாட்டை ஒருமைப்படுத்துவதாகவே உள்ளது. ஒருபக்கம், வடமாநிலங்களில் உள்ள பிரயாக்ராஜ், உஜ்ஜைன், நாசிக், ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதே நேரத்தில் தென் மாநிலங்களில், கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா, காவிரி ஆறுகளில் புஷ்கரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த இரண்டு விழாக்களும், நம் நாட்டின் புனித நதிகளை பாதுகாத்து பராமரிப்பதையும், நம் மத நம்பிக்கையையும் இணைக்கும் வகையில் உள்ளன.இதுபோலவே, கும்பகோணத்தில் இருந்து திருக்கடையூர் வரை, குடவாசலில் இருந்து திருச்சேறை வரை உள்ள பல கோவில்கள், கும்பமேளாவுடன் தொடர்புடையதாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி.,க்கு பாராட்டு
பிரதமர் பேசியதாவது: பாரம்பரியம், கலாசாரத்தில் மட்டுமல்ல, அறிவியல், தொழில்நுட்பத்திலும் தமிழகத்தின் சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளியில் உற்பத்தி செய்வது தொடர்பான புதிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யின் 'எக்ஸ்டெம்' என்ற மையம் உருவாக்கி வருகிறது. அத்துடன், 3டி தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டடங்கள், மெட்டல் போம், ஆப்டிக்கல் பைபர் போன்றவற்றை விண்வெளியில் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடக்கிறது. அதுபோல, தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் தயாரிப்பது தொடர்பான ஆய்வும் இங்கு நடக்கிறது.எதிர்கால சாதனைகளுக்கான முயற்சிகள் நடப்பது, நமக்கெல்லாம் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.