தமிழக காடுகளில் யானைகள் எண்ணிக்கை உயர்வு: கடந்த ஆண்டை விட 107 அதிகரித்து 3,170 ஆனது
சென்னை: தமிழகத்தில், 3,170 காட்டு யானைகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு கணக்கெடுப்பை விட, இந்த ஆண்டு 107 யானைகள் அதிகரித்துள்ளதாகவும், தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நடப்பாண்டில் நடத்தப்பட்ட மூன்றாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில், 3,170 காட்டு யானைகள் உள்ளன; இது, முந்தைய கணக்கெடுப்பில் இருந்த, 3 ,063 என்ற எண்ணிக்கையை விட, 107 யானைகள் அதிகம் என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது: தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான வளர்ச்சி, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வனவிலங்கு மேலாண்மை மற்றும் சமூக பங்களிப்பின் காரணமாக நிகழ்ந்துள்ளது. இது, தமிழகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. வளம் குன்றிய காடுகளை மீட்டெடுப்பதில் இருந்து, யானைகள் வழித்தடங்களை வலுப் படுத்துவது, மனித- - யானை மோதலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை, தமிழக வனத் துறையின் அணுகுமுறை முழுமையானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு பேசியதாவது: காடுகளிலும், நம் கலாசார அடையாளத்திலும் யானைகள் ஒரு அங்கமாக உள்ளன. யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, தமிழக வனத்துறையின் கொள்கைகள், முயற்சிகள் பலனளிக்கிறது என்பதன் அறிகுறி. வாழ்விட மறுசீரமைப்பு, அன்னிய களைச்செடிகளை அகற்றுதல், தீவனம், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினர். இந்த கணக்கெடுப்பின்படி, யானைகளின் அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு, 0.35 என மதிப்பிடப்பட்டு உள்ளது. மொத்த யானைகள் கணக்கெடுப்பில், 44 சதவீதம் வளர்ச்சியடைந்த யானைகள் உள்ளன. இதில், ஆண்- - பெண் விகிதம் 1:1.77 ஆக உள்ளது. முக்கூர்த்தி தேசியப் பூங்கா, மதுரை, தென்காசி, சேலம், வேலுார், திரு வண்ணாமலை வனப் பிரிவு களில் புதிதாக யானைகள் கண்டறியப்படவில்லை என, கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் மிக அதிக அடர்த்தி யாக, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு, 1.35 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்ற 2,043 பேர் கர்நாடகாவுடன் இணைந்து, கடந்த மே 23 முதல் 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு நடத் தப்பட்டது. தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பிராந்திய வனப்பிரிவுகள், ஒரு தேசியப் பூங்கா உட்பட, 26 வனப்பிரிவுகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம், 2,043 வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் 'பிளாக் கவுன்ட்' மற்றும் சாணம் கணக்கெடுப்பு, நீர்நிலை கணக்கெடுப்பு ஆகிய மூன்று நிலையான வழிமுறைகளை பயன்படுத்தினர்.