அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் விபரம் கவர்னருக்கு அனுப்ப அனைத்து துறைக்கும் உத்தரவு
புதுச்சேரி: அரசு அதிகாரிகள் மீதான புகார் விபரங்களை கவர்னருக்கு அனுப்ப அரசு துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு துறைகளில் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது. புகார்கள் தொடர்பாக அந்தந்த துறையில் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. சிலர் மீதான துறை ரீதியான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் மீது இதுவரை விசாரணை தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், அரசு அதிகாரிகள் மீதான புகார் விபரங்களை குறித்து கேட்டுள்ளார். இது குறித்து புதுச்சேரி அரசு சார்பு செயலர் கண்ணன், அரசு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது;புதுச்சேரி அரசு துறைகளில் பணிபுரியும் குருப் ஏ மற்றும் குருப் பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்கு விபரங்களை கவர்னருக்கு விரிவாக தெரிவிக்க, அவசரமாக தகவல்கள் தேவைப்படுகிறது. எனவே, புகாருக்கு ஆளான அதிகாரிகள் குறித்த முழு விபரங்களையும் வரும் 31ம் தேதிக்குள் py.gov.inஎன்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.புகாரில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் பணியிடை நீக்கம் ஆணை, விசாரணை அதிகாரியின் பெயர், அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பன போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.