வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய இலவம் பஞ்சு மரம் வெட்டி அகற்றம்
புதுச்சேரி: பாக்கமுடையன்பேட், ஏர்போர்ட் சாலை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலவம் பஞ்சு மரத்தை வனத்துறையினர் நேற்று வெட்டி அகற்றினர். புதுச்சேரி, பாக்கமுடையன்பேட், ஏர்போர்ட் சாலை சந்திப்பு வழியாக தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என, ஏராளமனோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். அங்குள்ள, செல்வவிநாயகர் கோவில் அருகே சாலையோரம் உள்ள ஒரு இலவம் பஞ்சு மரத்தில் இருந்து காய்கள் நன்கு வளர்ந்து வெடித்து பஞ்சுகள் காற்றில் பறந்து வந்தன. அவை, அவ்வழியாக வாகன ஓட்டிகளின் செல்பவர்கள் கண்களில் படும்போது கண் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகி வந்தனர். மேலும், காற்றில் பறக்கும் பஞ்சுகள் அங்குள்ள குடியிருப்புகளை சூழ்வதால், அப்பகுதி மக்களுக்கு ஆஸ்துமா, சைனஸ், சளி மற்றும் வீசிங் போன்ற சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் அறிவுறுத்தலின்படி. வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த இலவம் பஞ்சு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அதற்காக, பாக்கமுடையன்பேட் சாலையில் மதியம் 2 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.