கட்டாயம்
உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வருமான சான்று... சென்டாக்கில் புதிய நடைமுறை அமல் புதுச்சேரி: சென்டாக் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் கட்டாயமாக இணைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சென்டாக் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் கடந்த 14ம் தேதி தொடங்கி, மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். வழக்கம் போல் தங்களின் குடியிருப்பு சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் 3-ம் தேதி வரை இறுதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை உலுக்கும் குழப்பம் கடந்த காலங்களில் சென்டாக் விண்ணப்பத்தின் போது வருவாய் சான்றிதழ் கேட்டதில்லை. ஆனால் இம்முறை வருவாய் சான்றிதழையும் இணைக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், அச்சமும் எழுந்துள்ளன. சென்டாக் சேர்க்கைக்கும், குடும்ப வருமானத்திற்கும் என்ன சம்பந்தம்? அரசு வழங்கும் காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு இதன் பிறகு தனியாக வருவாய் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமா.. திடீரென இந்தச் சான்றிதழைப் பெற தாலுகா அலுவலகங்களை அலைந்து திரிய வேண்டுமா என, ஏகப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் பெற்றோர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நியாயமான குழப்பங்களுக்கு விடையளிக்கும் வகையில், சென்டாக் உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, இதற்கான பின்னணி காரணங்களை விளக்கினர். கடந்த காலங்களில் காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சென்டாக் மூலம் கல்லுாரிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த கல்லுாரிகள் வாயிலாகவே வருவாய் சான்றிதழைச் சமர்ப்பித்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் உயர்கல்வித்துறை இதில் ஒரு முக்கிய திருத்தத்தைக் கொண்டு வந்தது. உயர்கல்வித்துறையின் புதிய விதியின்படி, காமராஜர் கல்வி உதவித்தொகைக்கு தகுதி பெற குடும்ப வருமானத்தின் அடிப்படையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருந்தால் முழு நிதியுதவியும் கிடைக்கும். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் இருக்கும் மாணவர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் 50 சதவீத நிதியுதவி மட்டுமே வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வருமான வரம்பு விதிமுறை கல்வி ஆண்டின் நடுப்பகுதியில் கொண்டு வரப்பட்டதால், சென்டாக் அமைப்பால் மாணவர்களிடம் இருந்து வருவாய் சான்றிதழை முன்கூட்டியே பெற இயலவில்லை. இதனால் மாணவர்கள் கல்லுாரிகள் மூலமாக விண்ணப்பிப்பதில் பெரும் தாமதமும், நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பட்டன. இதனைத் தவிர்க்கவே இந்த ஆண்டு சென்டாக் நிர்வாகம் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது: ஏற்கனவே மாணவர்களின் குடியிருப்பு, சாதிச் சான்றிதழ்களைச் சரிபார்த்து உயர்கல்வித்துறைக்கு சென்டாக் அனுப்பி வைக்கிறது. அதேபோல, இந்த ஆண்டு முதல் வருவாய் சான்றிதழையும் சென்டாக் அமைப்பே நேரடியாக மாணவர்களிடம் இருந்து பெற்று சரிபார்க்கும். இதன் மூலம் மாணவர்கள் கல்லுாரிக்குச் சென்ற பிறகு உதவித்தொகைக்காகத் தனியாக விண்ணப்பித்து, சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அலைச்சல் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றனர். இந்த புதிய நடைமுறை மாணவர்களுக்குச் சுமையல்ல, மாறாக அவர்களின் கல்வி உதவித்தொகை தடையின்றி, விரைவாகக் கிடைப்பதற்கான ஒரு எளிய வழிமுறை. எனவே, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளும், காலக்கெடு முடிவதற்குள் (3-ம் தேதிக்குள்) தங்களின் வருவாய் சான்றிதழைத் தவறாமல் சென்டாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, உடனே வருவாய் சான்றிதழுக்கு விண்ணப்பித்து சென்டாக் பதிவை நிறைவு செய்ய வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.