ஆசிரியர் நியமிக்காததை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் போராட்டம்
வில்லியனுார்: அகரம் கிராமம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் நியமிக்கத்தாதல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வில்லியனுார் அருகே உள்ள அகரம் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரையில் உள்ள இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி மழலையர் பிரிவு ஆசிரி யர் பணியிட மாற்றம் செய்தனர். இதனால் மாற்று ஆசிரியரை நியமிக்காமல் கிடப்பில் போட்டனர்.இது குறித்து பெற்றோர்கள் சார்பில் கல்வித் துறையிடம் புகார் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கல்வித்துறை இயக்குனர், ஓரிரு நாட்களில் ஆசிரியர் நியமிப்பதாக தெரிவித்தார்.இதுநாள் வரை ஆசிரியர் நியமிக்காததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நேற்று காலை 10:00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஐந்தாம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆசிரியர் நியமிப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் பள்ளி வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.