தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1457 வழக்குகள் முடித்து வைப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1457 வழக்குகள் முடிக்கப்பட்டு, 14 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 707 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரான உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் உத்தரவின் பேரில், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுந்தர் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி நீதிமன்ற வளாங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணையத்தில் ஒரு அமர்வும் நடந்தது. இதனை தலைமை நீதிபதி ஆனந்த் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா மேற்பார்வையிட்டனர். காரைக்காலில் 5 அமர்வுகளும், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 22, அமர்வுகள் செயல்பட்டது.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள், 6209 எடுத்துக் கொள்ளப்பட்டு, 1457 வழக்குகள் முடிக்கப்பட்டு, 14 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 707 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்த 1,368 வழக்குகள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.