மூதாட்டியை ஏமாற்றிய குடும்பத்தினர் மீது வழக்கு
புதுச்சேரி: மூதாட்டியிடம் பல லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். புதுச்சேரி, முதலியார்பேட்டை, அனிதா நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 66. இவர் முதலியார்பேட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த அமுதா, அவரது தம்பி கருணா, மகள் கயல்விழி, மகன் சசி ஆகியோரிடம் ஏல சீட்டு பல தவணைகளாக ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கட்டியுள்ளார். மேலும், ராஜலட்சுமியின் கணவர் முருகனுக்கு பணி ஓய்வின் போது கிடைத்த பணத்தையும், அவர்களிடம் புரோ நோட்டு பெற்று கொண்டு வட்டிக்காக கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 5 தவணைகளாக ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு செப்., 30ம் தேதி ஏல சீட்டு பணம் மற்றும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, அமுதா, கயல்விழி, கருணா, சசி ஆகியோர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. இதுகுறித்து ராஜலட்சுமி ஏலச்சீட்டு மற்றும் புரோ நோட்டு கொடுத்து, ரூ. 14 லட்சத்து 46 ஆயிரம் பணத்தை ஏமாற்றிய நபர்கள் குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அமுதா, கயல்விழி, கருணா, சசி ஆகியோர் மீது அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.