முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கை; மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க., வலியுறுத்தல்
புதுச்சேரி; முதுநிலை மருத்துவ படிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.அவர் முதல்வரை சந்தித்து அளித்த மனு விபரம்;மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு அமல்படுத்திய பின், அந்தந்த மாநில கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இடங்கள் மாநில இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 370 முதுநிலை மருத்துவ இடங்களில் 186 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டு வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 29ம் தேதி, மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை நீட் தேர்வு தேர்ச்சியை தகுதியாக கொண்டு அகில இந்திய அளவில் நிரப்ப வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் புதுச்சேரி மாநில மாணவர்கள் முழுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.