உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பறவை காய்ச்சல் எதிரொலி: கால்நடை துறை எச்சரிக்கை

 பறவை காய்ச்சல் எதிரொலி: கால்நடை துறை எச்சரிக்கை

புதுச்சேரி: பறவை காய்ச்சல் எதிரொலியாக புதுச்சேரி பண்ணைகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் அடையாறு, நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் இறந்து கிடந்தன. அந்த, காகங்களின் மாதிரிகள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள், பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பறவை காய்ச்சல் தொடர்பாக புதுச்சேரி கால்நடை எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்துகால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் லதா மங்கேஸ்கர் செய்திக்குறிப்பு: பறவை காய்ச்சல் எதிரொலியாக கொம்யூன் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் கோழி பண்ணைகள், விற்பனை மையங்கள், குஞ்சு பொறிப்பகங்கள், கோழி அல்லது கோழி பொருட்கள் கையாளுதல் மற்றும் சந்தைபடுத்துதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பண்ணைகள் மற்றும் வீடுகளில் வ ளர்க்கப்படும் கோழிகள், பறவைகளை ஆய்வு செய்ய வேண்டும். கோழி விற்பனை மையங்களை ஆய்வு செய்து, ஆரோக்கியமான பறவைகள் மட்டுமே இறைச்சிக்காக வெட்டுப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோழிகள், முட்டைகள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன என்பதை சரிபார்க்க வேண்டும். பறவைகள், கோழிகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதோடு பண்ணை வளாகத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். வெளி இடங்களில் இருந்து காகங்கள், பறவைகள் பண்ணை வளாகத்தில் நுழையாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மேலும், பறவைக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இறந்த பறவைகள், கோழி பண்ணை கழிவுகளை அறிவியல் முறைப்படி அகற்ற வேண்டும். வணிக ரீதியிலான கோழி பண்ணைகளில் உள்ள மொத்த எண்ணிக்கை பட்டியலை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மக்கள் நோயுற்ற அல்லது இறந்த பறவைகளை கையாள வேண்டாம். அருகிலுள்ள கால்நடை அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். நன்கு வேகவைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் பாதுகாப்பானவை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை