தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
புதுச்சேரி: தீயணைப்புதுறை அலுவலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில், நேற்று காலை போன் கால் ஒன்று வந்தது. நிலையத்தில் இருந்த ஏட்டு, போனை எடுத்து பேசினார். அதில் பேசிய நபர், வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்து விட்டு, போனை கட் செய்தார். பதற்றம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் தாங்களாகவே அலுவலகம் முழுதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லை. இந்நிலையில், சில நிமிடங்களுக்கு பின், மீண்டும் தொடர்பு கொண்ட நபர், ஒரு முறை சொன்னால் புரியதா, வெடிகுண்டை அலுவலகத்தில் வைக்க வில்லை, தீயணைப்பு வண்டியில் வைத்துள்ளேன் என, மிரட்டி விட்டு, போனை கட் செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து தீயணைப்பு நிலைய அலுவலகம், தீயணைப்பு வண்டி, அறைகள் உள்ளிட்ட அந்த பகுதியில் சோதனையிட்டனர்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. பின், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததால், தீயணைப்பு வீரர்கள் நிம்மதியடைந்தனர். தீயணைப்பு துறைக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து, ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.