உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக அதிகரபூர்வ இ- மெயில் ஐ.டி.,க்கு, காலை 11:00 மணி அளவில் மெயில் ஒன்று வந்தது. அதில், கலெக்டர் அலுவலகத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் செய்தி இருந்தது.இதுகுறித்து, கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, எஸ்.பி., பக்தவசலம் தலைமையிலான இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கோரிமேடு தீயணைப்பு துறை, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து அறைகள், வெளிவளாகம், கலெக்டருடைய கார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதற்காக, கலெக்டர் அலுவலகத்தின் இரண்டு நுழைவு வாயில் மூடப்பட்டதுடன், ராஜிவ் சிக்னல் முதல் வி.வி.பி.,நகர் நுழைவு வாயில் வரை வழுதாவூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை கலெக்டர் அலுவலகம் முழுதும் நடந்த சோதனையில் வெடிகுண்டு இருப்பதற்கான எந்தவித தடயங்களுக்கும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. அதன்பிறகே, போலீசார் நிம்மதியடைந்தனர்.இருப்பினும், கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் இ-மெயில் வந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், முதற்கட்டமாக இ-மெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை ஆய்வு செய்து, இ-மெயில் எங்கிருந்து வந்தது, அனுப்பியது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அடுத்த நாள் பிரெஞ்சு துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. இச்சம்பவங்கள் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா போலீஸ்...

வெடிகுண்டு சோதனை நடத்த செல்லும் போலீசார், அந்த கட்டடத்தில் உள்ளவர்களை அவசரமாக வெளியேற்றுவார்கள். பின்னர், அங்குள்ள எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை அகற்றிவிட்டு, சோதனையை மேற்கொள்வது வழக்கம்.ஆனால், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்த சென்ற போலீசார், அதிரடியாக வழுதாவூர் சாலை போக்குவரத்தை தடை செய்து, வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். பின்னர், கலெக்டர் அலுவலக ஊழியர்களை வெளியேற்றாமல், அவர்களை மொட்டை மாடிக்கு அனுப்பிவிட்டு, 'பாதுகாப்பாக' சோதனை மேற்கொண்டனர்.அந்த நேரத்தில் முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம் கலெக்டர் அலுவலக சாலை வழியாக ராஜிவ் சதுக்கம் நோக்கி சென்றனர். உடன் போலீசார், மூடப்பட்ட சாலையை திறந்து முதல்வருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.போலீசாரின் இந்த செயல்களை கண்ட பொதுமக்கள், 'என்ன ஒரு புத்திசாலித்தனம்' என நமட்டு சிரிப்பு சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை