பாகூரில் காகங்களை தொடர்ந்து கோழிகள் இறப்பு : மக்கள் அச்சம்
பாகூர்: பாகூரில் காகங்களை தொடர்ந்து, கோழிகளும் மர்மமான முறையில் இறந்து வருவதால், பறவை காய்ச்சல் பீதியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காகங்கள் மர்மமான முறையில் இறந்தன. ஆய்வில் எச்.5.என்.1 வைரஸ் (பறவை காய்ச்சல்) தொற்றால் காகங்கள் இறந்தது உறுதியானது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. இதனை அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள், கடந்த 18ம் தேதி பாகூரில் இறந்து கிடந்த 3 காகங்களின் உடல் பாகங்களை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பினர். அதன் முடிவு வந்த பின்னரே, காகங்களின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும். இந்நிலையில், பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம், சேலியமேடு உள்ளிட்ட கிராமங்களில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து வரும் நிலையில், காமராஜர் நகர் இளங்கோ என்பவர் வீட்டில் வளர்த்து வந்த மூன்று கோழிகள் அடுத்தடுத்து நேற்று மர்மமான முறையில் இறந்தன . அதேபோன்று, பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் சிவா என்பவர் வீட்டில் 5 கோழிகள் இறந்தன. காகங்களை தொடர்ந்து கோழிகளும் மர்மமான முறையில் இறந்து வருவதால், பாகூர் பகுதி மக்கள் பறவை காய்ச்சல் பீதியால் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக, பாகூர் பாரம்பரிய பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், பாகூர் கால்நடைத்துறை மருத்துவ அதிகாரியிடம், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி மனு அளித்தனர்.