உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் வெளியேற்றம் தலைமை பொறியாளர் தகவல்

தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் வெளியேற்றம் தலைமை பொறியாளர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் என பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரியில் புயல் சீற்றம் காரணமாக தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த வெள்ளத்தை பொதுப்பணித்துறை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. 45 மோட்டார் பம்ப் செட்கள் மூலம் மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. வெங்கட்டா நகர் துணைமின் நிலையத்தில் சூழ்ந்த வெள்ளம் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு மின்பகிர்வு சரி செய்யப்பட்டது.கனமழை மற்றும் புயலின் தாக்கத்தால் புதுச்சேரியின் குடிநீர் விநியோகமும் கழிவு நீர் அகற்றும் பணிகளும் பாதிக்கப்பட்டன. மின் மோட்டார்கள் மற்றும் மின்சார சாதனங்கள் நீரில் மூழ்கின. 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்கள், 26 குடிநீர் இறவை நிலையங்கள் மற்றும் 7 கழிவுநீர் உந்து நிலையங்கள் ஆகியவை மழைநீரால் சூழப்பட்டன. இந்தப் பகுதிகளில் உடனடியாக தண்ணீர் டேங்கர்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்கப்பட்டது.நீரில் மூழ்கிய மின் மோட்டார்கள், மின்சாதனங்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படுகின்றன. புதுச்சேரி பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டர்கள் மூலம் மின்மோட்டார்கள் இயக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மழை சூழப்பட்ட பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் அனைத்திலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பினால் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இவ்வாறு அவர் கூறினார். கண்காணிப்பு பொறியாளர்கள் வீரசெல்வம், பாலசுப்ர மணியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை