பக்தர்களுக்கு அன்னதானம் காங்., செயலாளர் வழங்கல்
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி காங்., சார்பில், மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜ்பவன் தொகுதி வைத்திகுப்பம் கடற்கரையில் 124ம் ஆண்டு மாசி மக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர், திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் தமிழகத்தில் இருந்து வந்து பங்கேற்றனர். மேலும், புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசி மக தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியை முன்னிட்டு, மாநில காங்., செயலாளர் குமரன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.